செய்திகள்
ஆம்புலன்சில் மேற்கு வங்காளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தை

அன்னவாசல் அருகே ஆம்புலன்சில் மேற்கு வங்காளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

Published On 2020-11-28 08:30 GMT   |   Update On 2020-11-28 08:30 GMT
அன்னவாசல் அருகே ஆம்புலன்சில் மேற்கு வங்காளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாயும், சேய்யும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அன்னவாசல்:

மேற்கு வங்காளம் சிலிகுடி பகுதியை சேர்ந்தவர் சுமன். இவரது மனைவி ஜர்னா (வயது 26). இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜர்னாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அவரது கணவர் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜர்னாவை அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் அன்னவாசல் அருகே உள்ள திருவேங்கைவாசல் என்னும் இடத்தில் சென்றபோது ஜர்னாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாய் ஜர்னா மற்றும் குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தாயும், சேய்யும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகிய இருவருக்கும் குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News