செய்திகள்
இணையதளம்

வெளிமாநிலம் செல்லும் வாகனங்களுக்கு இணைய தளம் வாயிலாக பெர்மிட் வசதி- போக்குவரத்து ஆணையர் தகவல்

Published On 2020-11-18 06:14 GMT   |   Update On 2020-11-18 06:15 GMT
வெளி மாநிலத்திற்கு செல்வதற்காக சிறப்பு பெர்மிட் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், போக்குவரத்து சோதனை சாவடிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சேவை இணைய தளம் மூலமாக வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து துறை சம்பந்தமான அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்டு இணைய தளம் வழியாக அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய தகவல் மையம் உருவாக்கிய வாகன் 4.0 மற்றும் சாரதி 4.0 என்ற மென்பொருட்கள் மூலம் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி பெர்மிட் பெற்ற பயணிகள் ஒப்பந்த வாகனங்கள், வெளி மாநிலத்திற்கு செல்வதற்காக சிறப்பு பெர்மிட் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், போக்குவரத்து சோதனை சாவடிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சேவை இணைய தளம் மூலமாக வழங்கப்பட உள்ளது.

இதனால் வாகனம் ஒட்டுபவர்கள் தங்கள் மொபைல் போனில் இருந்தோ அல்லது வீட்டில் இருந்து கணினி மூலமாகவோ தாங்களாகவே தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலுத்தி தனி பெர்மிட் பெற முடியும். இதனால் வாகன ஓட்டிகள் சோதனைச்சாவடிக்கோ, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. தனி பெர்மிட் போல வெளியூரில் இருந்து புதுவைக்கு வரும் வாகனங்களும் இணைய தளம் மூலமாக தற்காலிக பெர்மிட் விரைவில் வழங்கப்பட உள்ளது. https://parivahan.gov.in/parivahan என்ற இணைய தளம் வாயிலாக இந்த தனி பெர்மிட் பெற முடியும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News