செய்திகள்
காரைக்கால் அருகே குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி, ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி காரைக்கால் குடிமைபொருள் வழங்கல் துறையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயன்றனர்.
காரைக்கால்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி, ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி காரைக்கால் குடிமைபொருள் வழங்கல் துறையை பா.ஜ.க.வினர் நேற்று முற்றுகையிட முயன்றனர். இதற்காக காரைக்கால் மதகடி சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை அருகில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் துரை சேனாதிபதி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ராதா அப்பாதுரை, நிர்வாகிகள் சண்முகம், இளங்கோவன், அப்பு உள்பட பலர் அங்கு திரண்டனர்.
அப்போது தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள சூழலில் இதுவரை சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்படாதது கண்டனத்திற்குரியது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட குடிமைப்பொருள் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நகர போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 68 பேரை கைது செய்தனர்.