செய்திகள்
திருபுவனை அருகே உள்ள ஆண்டியார் பாளையத்தில் பாம்பு சிகிச்சை அளித்ததை படத்தில் காணலாம்.

கருவளையத்தை நீக்குவதாக நல்ல பாம்பை முகத்தில் தேய்த்து நூதன சிகிச்சை- இளைஞர்கள் பயந்து ஓடினர்

Published On 2020-11-12 09:10 IST   |   Update On 2020-11-12 14:34:00 IST
திருபுவனை பகுதியில் கருவளையத்தை நீக்குவதாக நல்ல பாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருபுவனை:

முகம், கழுத்து உள்ளிட்ட உடலில் பல இடங்களில் பரு, தேமல், கண்களில் கருவளையம் போன்றவற்றை நீக்கி தோற்றப் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதில் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவருக்குமே ஆர்வம் இருக்கத் தான் செய்கிறது. இதை பயன்படுத்தி பல்வேறு அழகு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கடைகளில் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் புதூரை சேர்ந்த குமரேசன் என்ற பாம்பாட்டி திருபுவனையில் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ‘முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? தன்னிடம் உள்ள விஷப்பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும். அவை இருந்த இடம் இல்லாமல் போய் விடும்’ என்று ஆசை வார்த்தை கூறி இந்த நூதன சிகிச்சை பெற அழைத்துள்ளார்.

இதை நம்பி பலரும் இந்த சிகிச்சை பெற முன்வந்தனர். அந்த பாம்பாட்டி 100 ரூபாயை வாங்கிக் கொண்டு அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பை கையில் சுற்றி கருவளையத்தை நீக்குவதாக அவர்களது முகத்தில் தேய்த்தார். அப்போது பலர் பயந்து நடுங்கியபடியே இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். இளைஞர்கள் பலர் பயந்து ஓடியதையும் காண முடிந்தது. அபாயகரமான இந்த பாம்பு சிகிச்சையுடன் நின்று விடாமல் மஞ்சள் கரு கலந்த மருந்தையும் கொடுத்து அதை முகத்தில் தேய்த்து வருமாறு பொதுமக்களுக்கு அந்த பாம்பாட்டி டிப்சும் கொடுத்தது இதன் உச்சகட்டமாகும்.

இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Similar News