செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

கவர்னர் கிரண்பேடியுடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

Published On 2020-11-11 11:35 IST   |   Update On 2020-11-11 11:35:00 IST
கவர்னர் கிரண்பேடியை பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தினர்.
புதுச்சேரி:

புதுவை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வசதியாக 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கோப்பு தயாரித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இதற்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுத்ததுடன் அந்த கோப்பை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி விட்டார். இத்தகைய சூழ்நிலையில் புதுவையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் சட்டப்பூர்வமாக இந்த பிரச்சினையை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் பா.ஜ.க.வைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் கவர்னர் கிரண்பேடியை கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வலியுறுத்துமாறு கவர்னரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த சந்திப்பு முடிந்தது மாநில பா.ஜ.க. தலைவரான சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

10 சதவீத இடஒதுக்கீடு என்பது கொள்கை சம்பந்தப்பட்டது. இதில் கவர்னர் முடிவு எடுக்க முடியாது என்பதால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதை வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது தவறுகளை மறைக்க கவர்னர் மேல் பழிபோடுகிறார்.

10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து நாங்கள் வலியுறுத்துவோம். மத்திய அரசு அனுமதித்தால் உடனடியாக அமல்படுத்த வாய்ப்பு உள்ளது என்று கவர்னர் எங்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News