செய்திகள்
கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்ட காட்சி.

தனியார் தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

Published On 2020-11-10 13:59 GMT   |   Update On 2020-11-10 13:59 GMT
சம்பளம் வழங்கக்கோரி தனியார் தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
கூடலூர்:

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் ஆளாகி உள்ளனர்.

எனவே சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை சம்பளம் வழங்கவில்லை. இதை கண்டித்தும், 5 மாத சம்பளத்தை வழங்கக்கோரியும் தொழிலாளர்கள் நேற்று நியூஹோப்பில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் தேயிலை தோட்ட நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த வாரத்திலேயே சம்பளம் வழங்கப்படும் என்று தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள 5 மாத சம்பளத்தில் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு 2 மாத சம்பளம் மற்றும் பயணப்படியை மட்டுமாவது வழங்க முன்வர வேண்டும். மேலும் பல ஆண்டுகளாக போனஸ் வழங்குவதில்லை.

எனவே தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு நிலுவை சம்பள தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News