செய்திகள்
தேயிலைத்தூள்

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி

Published On 2020-11-10 15:04 IST   |   Update On 2020-11-10 15:04:00 IST
குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர்.

இதைத்தொடர்ந்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 கிழமைகளில் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி

விற்பனை எண் 45-க்கான ஏலம் கடந்த 5, 6-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 19 லட்சத்து 15 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 14 லட்சத்து 51 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 64 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 12 லட்சத்து 81 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இது 68 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.19 கோடியே 15 லட்சம் ஆகும். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.2 விலை வீழ்ச்சி ஏற்பட்டது. சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.301, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.247 என இருந்தது.

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.110 முதல் ரூ.119 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.170 முதல் ரூ.200 வரையும், டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.136 முதல் ரூ.139 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.180 முதல் ரூ.225 வரையும் இருந்தது.

வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அடுத்து வரும் 12, 13-ந் தேதிகளில் ஏலம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விற்பனை எண் 46-க்கான ஏலம் 19, 20-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

Similar News