செய்திகள்
தீபாவளியை முன்னிட்டு கடை வீதிகளில் கொரோனா பரிசோதனை- கலெக்டர் உத்தரவு
தீபாவளியை முன்னிட்டு கடை வீதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நல வழித்துறைக்கு கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்கவேண்டும். வெளியில் எங்கு சென்றாலும், சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். பண்டிகை அன்றும் இதை கடைபிடிக்க வேண்டும். மாலை நேரங்களில் கடைக்கு செல்வதைவிட, மதிய நேரங்களில் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வரவேண்டும். வணிகர்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.
பொருள் வாங்க வரும் பொதுமக்களுக்கும் இது குறித்து வலியுறுத்த வேண்டும். அனைத்து கடைகளிலும் கை கழுவ தண்ணீர், சானிடைசர் வைத்திருக்க வேண்டும். கடைவீதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில், கொரோனா பரிசோதனையை மாவட்ட நலவழித்துறை தீவிரப்படுத்த வேண்டும். நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். பண்டிகைக்கு முதல் நாள் கடைவீதிகளில் கூட்டமாக பொருட்கள் வாங்காமல் முன்னதாகவே வாங்கி பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் கூறும்போது, ‘காரைக்காலில் உள்ள அனைத்து சரக எல்லைக்குட்பட்ட அதிகாரிகள், போலீசார் தீபாவளி காலங்களில் சிறப்பு குழுக்கள் அமைத்து மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது குறித்து ஒலிபெருக்கி மூலம் அடிக்கடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரே இடத்தில் அதிகம் கூட்டம் கூடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ரோந்துப் பணியை பலப்படுத்த வேண்டும்’ என்றார்.