செய்திகள்
ஈரோட்டில் பாம்பு கடித்து பெண் பலி
ஈரோட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 40). சமையல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சமையல் செய்து கொண்டு இருந்தபோது பாம்பு கடித்து உள்ளது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வெண்ணிலா மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவர் மீண்டும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வெண்ணிலா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.