செய்திகள்
கோப்புப்படம்

தேவகோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2020-11-05 09:07 GMT   |   Update On 2020-11-05 09:07 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமீப காலமாக பத்திரப்பதிவு அதிக அளவில் நடைபெற்று வந்தது.  நேற்று மாலை திடீர் என லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மன்னன் தலைமையில் ஆய்வாளர் சந்திரன், குமார வேல், சார்பு ஆய்வாளர் ராஜாமுகமது மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட குழு பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை செய்ய வந்தனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாமல் இருக்க அலுவலகத்தை கதவுகளை மூடிவிட்டு சோதனை நடத்தினார்கள். சுமார் 6 மணி நேரம் சோதனை நடந்தது.

துணை கண்காணிப்பாளர் மன்னன் பத்திர பதிவாளர், அலுவலக எழுத்தாளர், அலுவலக பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அலுவலக வளாகத்திலும், அலுவலக பணியாளர்களின் வாகனங்களிலும் சோதனை நடத்தினர்.

சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.83,100 பறிமுதல் செய்தனர். இந்த பணம் எவ்வாறு வந்தது என தீவிர விசாரணை நடத்தினர்.

சில நாட்களுக்கு முன்பு தேவகோட்டையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் வேலுசாமி வீட்டு வரி விதிப்புக்கா ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்று லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் மற்ற அரசு அலுவலகங்களிலும் சோதனை நடைபெற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News