செய்திகள்
சான்றிதழ்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுமக்களிடம் குறைகேட்டபோது எடுத்தபடம்.

தாசில்தார் அலுவலகங்களில் நாராயணசாமி ஆய்வு

Published On 2020-11-04 11:24 IST   |   Update On 2020-11-04 11:24:00 IST
தாசில்தார் அலுவலகங்களில் ஆய்வு நடத்திய முதல்- அமைச்சர் நாராயணசாமி சான்றிதழ்களை விரைவாக வழங்குமாறு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:

புதுவை கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேருவதற்காக வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி, இருப்பிட சான்றிதழ்கள் பெறுவதில் கடும் சிரமம் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சான்றிதழ் தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று புதுவை, வில்லியனூர் தாலுகா அலுவலகங்களில் முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதற்கு அதிக அளவில் காத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர்களிடம் சென்று சான்றிதழ் பெறுவதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது? என்பது குறித்து நாராயணசாமி பரிவுடன் கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்களை அலைக்கழிக்காமல் சான்றிதழ்களை விரைவாக வழங்குமாறு அறிவுறுத்தினார்.

குறிப்பாக பொதுமக்கள் கூட்டமாக கூட வாய்ப்பு அளிக்காமல் தனித்தனியாக பிர்கா வாரியாக சான்றிதழ்களை விரைவாக வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டரும், வருவாய்த்துறை செயலாளருமான அருண் உடனிருந்தார்.

Similar News