செய்திகள்
கேளம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேளம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர்:
பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து பா.ஜ.க.வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற இருந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற நடிகை குஷ்பு கோவளம் அருகே கைது செய்யப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டார். அங்கு திரண்ட பா.ஜ.க.வினர் திருமாவளவன் எம்.பி.யை தரக்குறைவாக பேசினர். இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் தலைமையில் அந்த கட்சியினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது மட்டும் தடியடி நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேளம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் மண்டல செயலாளர் விடுதலைசெழியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வன்னியரசு, சிறுத்தை கிட்டு, தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்தும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும் கோஷமிட்டனர்.