செய்திகள்
நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கவர்னர் விரைந்து ஒப்புதல் வழங்க கேட்டும்,
மத்திய மற்றும் மாநில அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்படுவதை கண்டித்தும், எனவே வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பால்ராஜ், பொருளாளர் ரவிகுமார், மாநகர செயலாளர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர்கள் முருகன், செண்பகவள்ளி, ஜெபராஜ் மற்றும் மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் தர்மராஜன், மேற்கு மாவட்ட செயலாளர் சாஜி மற்றும் நிர்வாகிகள் ஜெயராஜ், எபினேசர்,சந்திர உள்பட பலர் கலந்துகொண்டனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.