செய்திகள்
கோப்பு படம்.

நெடுவாசலில் கதண்டுகள் கடித்து விவசாயி பலி

Published On 2020-10-24 13:10 GMT   |   Update On 2020-10-24 13:10 GMT
நெடுவாசலில் கதண்டுகள் கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
வடகாடு:

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 71). விவசாயியான இவருக்கு நெடுவாசல் வடக்கு கிராமத்தில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று இவரது தோப்பில் தேங்காய் பறிக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது, ஆறுமுகம் உள்பட தொழிலாளர்கள் ஒரு தென்னைமரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர். 

இதற்கிடையில் அந்த மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் திடீரென்று கலைந்து அங்கும், இங்குமாக பறந்து சென்றது. இதனையடுத்து தென்னைமரத்தின் கீழே நின்றிருந்த ஆறுமுகத்தை நூற்றுக்கணக்கான கதண்டுகள் கடித்தது. மேலும் அருகே நின்றுகொண்டு இருந்த கூலி தொழிலாளர்களையும் கதண்டுகள் கடித்தன. இதைப்பார்த்த மற்றதொழிலாளர்கள் கதண்டுகளை தீயிட்டு விரட்டினர். தொடர்ந்து கதண்டுகள் கடித்ததில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் கதண்டுகள் கடித்ததில் பெண்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நெடுவாசலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News