செய்திகள்
நாயை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலி

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்வி சென்ற சிறுத்தைப்புலி

Published On 2020-10-21 09:28 GMT   |   Update On 2020-10-21 09:28 GMT
குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்வி சென்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி:

குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் பாய்ஸ் கம்பெனி அருகே நல்லப்பன் தெருவில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று வந்து செல்கிறது.

நேற்று முன்தினம் இரவு அந்த சிறுத்தைப்புலி குடியிருப்புக்குள் புகுந்து ஒரு வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. இரவு நேரங்களில் சிறுத்தைப்புலி வந்து செல்வதாலும், நாயை கவ்வி சென்றதாலும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தைப்புலி நாயை பிடித்து சென்றது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இரவில் வருவதால் வனத்துறையினர் கைகளில் தீப்பந்தம் ஏந்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். குடியிருப்புக்குள் நடமாடி வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
Tags:    

Similar News