செய்திகள்
திருப்போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
திருப்போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்துள்ள செம்பாக்கம், சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி காவேரி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அதிகாலை 3 மணியளவில் ராஜசேகரனின் மனைவி காவேரி தனது கணவரை எழுப்பி வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதாக கூறினார். இதையடுத்து எழுந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.