செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது மினி லாரி மோதி 2 பேர் பலி

Published On 2020-10-12 05:24 GMT   |   Update On 2020-10-12 05:24 GMT
சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள குமுதேப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 40). இவர் நேற்று மாலை அட்டகுறுக்கி என்ற இடத்தில் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு தனது நண்பர்கள் 3 பேருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பார்சல் மினி லாரி ஒன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் அதே கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் (31), கல்லுகுறுக்கியை சேர்ந்த முனிராஜ், அங்கேபள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மல்லேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முனிராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் விரைந்து சென்று வெங்கடேஷ், மல்லேஷ் ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.
Tags:    

Similar News