செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி ஓட்டலில் 10 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி அசத்தல்

Published On 2020-10-12 04:44 IST   |   Update On 2020-10-12 04:44:00 IST
உலக பிரியாணி தினத்தையொட்டி வாடிக்கையாளர்களை கவர்வதற்காக திருச்சி ஓட்டலில்10 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது
திருச்சி:

திருச்சியில் செயல்பட்டு வரும் ஓட்டலில் உலக பிரியாணி தினத்தையொட்டி புதுவிதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வந்தனர். அதில், 10 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என்றும், காலை 10 மணிக்கு 10 பைசாவை கொடுத்து டோக்கன் பெற்றுக்கொள்ளும் முதல் 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர். உடனே தங்களிடம் இருந்த பழைய 10 பைசா நாணயங்களை தேடி எடுத்து வந்து நேற்று காலை 9 மணி முதலே ஓட்டலின் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினர். சரியாக 10 மணி தொடங்கியதும் வரிசையில் நின்றவர்களுக்கு சிக்கன் பிரியாணி பொட்டலங்களை ஊழியர்கள் வழங்கினர்.

ஆனால் நேரம் செல்ல, செல்ல 10 பைசா நாணயங்களுடன் வந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே சென்றது. இருந்தாலும், தங்களுக்கும் பிரியாணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் நீண்ட வரிசையில் வரிசையில் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு பிரியாணி வழங்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே 100 பேருக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் பிரியாணி கிடைக்காத பலர் ஏமாற்றத்துடன் 10 பைசா நாணயங்களுடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கே.எம்.எஸ்.மொய்தீன் கூறுகையில், “உலக பிரியாணி தினத்தையொட்டி வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இலவசமாக பிரியாணி வழங்கலாமா என்று முதலில் யோசித்தேன். ஆனால் இலவசமாக கொடுப்பதைவிட அவர்களிடம் இல்லாத ஒன்றை கொண்டு வர சொல்லலாம் என்று நினைத்து, 10 பைசா நாணயத்துடன் வரும் முதல் 100 பேருக்கு மட்டுமே பிரியாணி என்று அறிவித்தேன்.

மேலும், இப்போது 10 பைசா நாணயம் புழக்கத்தில் இல்லாததால் பெரும்பாலானவர்களிடம் இருக்காது என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு பேர் 10 பைசா நாணயங்களை வைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.“ என்றார்.

Similar News