செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டு - பட்டதாரிகள் 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பட்டதாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி சுந்தரம். இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவு வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இது குறித்து காமாட்சி சுந்தரம் பாலுசெட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் மற்றும் போலீசார் கீழம்பி ஜங்ஷனில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி நிறுத்தினர். அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் காமாட்சி சுந்தரத்தின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 22) மற்றும் அவரது நண்பரான திருவண்ணாமலை மாவட்டம் வெண் பாகம் அடுத்த புத்தனூர் பகுதியை சேர்ந்த துரைபாண்டி (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் சுந்தர் ராஜன் பி.ஏ. பட்டதாரி. துரைபாண்டி பி.பி.ஏ. பட்டதாரி ஆவார். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.