செய்திகள்
பணம் திருட்டு

திட்டச்சேரியில் விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

Published On 2020-10-11 10:47 GMT   |   Update On 2020-10-11 10:47 GMT
திட்டச்சேரியில் விவசாயியிடம் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் கீழத்தெரு சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 52). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது விவசாய பணிகளை மேற்கொள்ள திட்டச்சேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 3 பவுன் நகையை அடமானம் வைத்தார். அதற்காக வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை பெற்று ஒரு பையில் தனது சைக்கிளின் கூடையில் வைத்தார்.

இதைபார்த்த மர்ம நபர்கள் ராதாகிருஷ்ணனை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தனர். ராதாகிருஷ்ணன் திட்டச்சேரியில் உள்ள ஒரு பழக்கடையில் பழங்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் சைக்கிளில் இருந்த பணத்தை திருடி கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து திட்டச்சேரி போலீசில் ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ராதாகிருஷ்ணனை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் பண பையை திருடி செல்லும் காட்சிகள் அங்குள்ள ஒரு சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News