செய்திகள்
ஆன்லைன் தொழிலில் நஷ்டம்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தவளக்குப்பத்தில் ஆன்லைன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). இவர் புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் ஸ்ரீநிவாசா அவின்யூ பகுதியில் வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்யும் தொழில் செய்துவந்தார். இவருக்கு தேன்மொழி (32) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்மொழி தோழி ஒருவருடன் கோவிலுக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்ததால், தான் வைத்திருந்த மற்றொரு சாவியால் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது சமையல் அறையில் ஜெயக்குமார் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேன்மொழி, கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ஜெயக்குமாரை மீட்டு பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெயக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆன்லைன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.