செய்திகள்
தற்கொலை

திருவையாறு அருகே கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் ஆற்றில் குதித்து தற்கொலை

Published On 2020-09-12 09:52 GMT   |   Update On 2020-09-12 09:52 GMT
திருவையாறு அருகே கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், திருவையாறை அடுத்த உப்பு காச்சி பேட்டை காவிரி ஆற்றின் தென்கரையில் ஒரு முதியவர் பிணம் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் பஹிராபானுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் திருவையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொரோனாவில் இருந்து மீண்டவர் கடந்த 9-ந் தேதி கரந்தை செல்லியம்மன் கோவில் தெரு சிவப்பிரகாசம் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது59) என்பவரை காணவில்லை என்று தஞ்சை கிழக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை கிழக்கு போலீசார் புகார் கொடுத்தவரை அழைத்துக்கொண்டு இறந்தவர் உடலை பார்த்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் குமரேசன் என்பதும், இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து கடந்த 7-ந் தேதி வீட்டுக்கு வந்து தனிமையில் இருந்துள்ளதும், இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் திருவையாறுக்கு வந்து காவிரி ஆற்றில் குதித்துள்ளதும் தெரியவந்தது.

இதில் குமரேசன் உடல் ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உப்பு காச்சி பேட்டை காவிரி ஆற்றின் தென்கரையில் ஒதுங்கியது தெரியவந்தது. இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News