செய்திகள்
கைது

வாங்கிய கடனுக்கு வட்டி கட்டச்சொல்லி மிரட்டல்: தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது

Published On 2020-09-11 09:59 GMT   |   Update On 2020-09-11 09:59 GMT
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டச்சொல்லி மிரட்டிய கரூர் தனியார் நிதி நிறுவன மேலாளரை கைது செய்து, 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வையாபுரிநகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 31). வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது தாய் சுகுணா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.

அந்த கடனுக்கு 4 மாதங்கள் வட்டி கொடுத்த அவர், அதன் பிறகு செலுத்த வில்லை. இதனையடுத்து அந்த கடனை அவரது மகன் கோபிநாத் கட்டுவதாக ஒப்புக்கொண்டு உள்ளார். இந்நிலையில் மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகள் கோபிநாத் அந்த நிறுவனத்திற்கு வட்டி செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக கோபிநாத் வட்டி செலுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அந்த நிதி நிறுவனத்தின் மேலாளர் செந்தில்குமார் (29), ஊழியர் பிரகாஷ் ஆகியோர் கோபிநாத் வீட்டுக்கு சென்று, வட்டியை கட்டச்சொல்லி திட்டி மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து கோபிநாத் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பந்து, நிதி நிறுவன மேலாளர் செந்தில்குமாரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள ஊழியர் பிரகாஷ், நிதி நிறுவன உரிமையாளர் கணேசமூர்த்தி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News