செய்திகள்
ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள இந்தியன் வங்கி மூடப்பட்டு இருப்பதை காணலாம்

ஊழியருக்கு கொரோனா தொற்று- ஊட்டியில் 2 வங்கிகள் மூடல்

Published On 2020-09-05 16:02 IST   |   Update On 2020-09-05 16:02:00 IST
ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஊட்டியில் 2 வங்கிகள் மூடப்பட்டன.
ஊட்டி:

நீலகிரியில் ஊட்டி நகராட்சியில் 36 இடங்கள், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 29 இடங்கள் உள்பட குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என மொத்தம் 150 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 135 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ள இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அப்பகுதிகளில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் தென்படுகிறதா? என்பதை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு தெரிவித்துள்ள வழிமுறையின்படி சிகிச்சை அளிக்கப்படுவதால் குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஊட்டி அருகே எம்.பாலாடாவில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஊட்டி கமர்சியல் சாலையில் இயங்கி வரும் இந்தியன் வங்கிக்கு பணி நிமித்தமாக வந்து சென்று உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சளி மாதிரி எடுத்து பரிசோதித்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்த 2 வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் 20 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கையாக 2 இந்தியன் வங்கிகளும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு மூடப்பட்டது. இதனால் வங்கிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வங்கிகள் முன்பு கொரோ னா பாதிப்பு காரணமாக வங்கி மூடப்பட்டு உள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

Similar News