செய்திகள்
போராட்டம்

தலைமை தபால் நிலையம் முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2020-09-05 09:12 GMT   |   Update On 2020-09-05 09:12 GMT
கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் சம்பளம், ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து இன்று தலைமை தபால் நிலையம் முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் 32 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.

இதில் 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் 400 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஆசிரியர் தினத்தை புறக்கணித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

இதன்படி இன்று காலை ஆசிரியர்கள் ரங்கப்பிள்ளை வீதி- மி‌ஷன் வீதி சந்திப்பில் ஒன்று கூடினர். அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் வழியாக கவர்னர் மாளிகையை முற்றுகையிட வந்தனர். அங்கு போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்தனர்.

இதனையடுத்து தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News