செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

கர்ப்பிணிகள், வயதானவர்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் - கலெக்டர் அறிவுரை

Published On 2020-09-03 08:56 GMT   |   Update On 2020-09-03 08:56 GMT
கர்ப்பிணிகள், வயதானவர்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரை வழங்கினார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட இடுஹட்டி கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தேயிலை விவசாயிகள் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள சோப்பு, முகக்கவசம், கையுறை, பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு தெரிவித்து உள்ள வழிமுறைகளையும், விதிமுறைகளையும் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொண்டு, அதன் பின் தங்களது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி பகுதிகளில் ஊராட்சி தலைவர், ஊர் தலைவர் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தேயிலை விவசாயிகள் பாதுகாப்பான பொருட்களை பயன்படுத்தி அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தங்களை காத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News