செய்திகள்
கனிராவுத்தர் குளம் ஆக்கிரமிப்பு பகுதியில் கரை அமைக்க எதிர்ப்பு- பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க அமைப்பாளர் நிலவன் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கனிராவுத்தர்குளத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை முழுமையாக கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கரைகளை பலப்படுத்தும் பணி செய்ய வேண்டும். தற்போது இருக்கும் குளத்தின் அளவுக்கு கரைகளை பலப்படுத்தினால் அது ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அரசு சார்பில் பாதுகாப்பதாக அமையும். எனவே கரை மற்றும் மதில் சுவர் கட்டக்கூடாது என்று கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினர் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கரைகளையொட்டி மதில் சுவர் கட்டும் பணி நடப்பதாக தகவல் வந்தது. உடனடியாக கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க அமைப்பாளர் நிலவன் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் நிலவன் உள்பட 15 பேர் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.