செய்திகள்
கைது

விமான உதிரி பாகத்தில் இரிடியம் இருப்பதாக ரூ.6 கோடி மோசடி- மேலும் ஒருவர் கைது

Published On 2020-08-22 10:34 GMT   |   Update On 2020-08-22 10:34 GMT
விமான உதிரி பாகத்தில் இரிடியம் இருப்பதாக கூறி ரூ.6 கோடி மோசடி செய்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிலரை தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:

கரூர் வையாபுரி நகர் கோவை ரோடு பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் மதன்குமார்(வயது43). இவரிடம் ராமேசுவரம் திட்டக்குடி தெருவை சேர்ந்த அய்யாவு மகன் முனியசாமி(45) விமான உதிரி பாகத்தில் இரிடியம் இருப்பதாகவும், ரூ.6 கோடி செலவழித்து இரிடியம் உள்ள உதிரிபாகத்தை வாங்கினால் அதனை வைத்து ரூ.12 கோடி சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய மதன்குமார் மேற்கண்ட முனியசாமி மற்றும் அவரின் கூட்டாளிகளான ராமநாதபுரம் அரண்மனை மேற்குத்தெரு கணபதி மற்றும் அவரின் மகன்கள் வீரபாகு, சுகுமாறன், ராமநாதபுரம் பாஸ்கரன் ஆகியோரிடம் ரூ. 6 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தொகையை பெற்றுக்கொண்டவர்கள் இரிடியம் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து விட்டார்களாம்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 15-ந் தேதி ராமநாதபுரம் அரண்மனை மேற்குத்தெரு கணபதி மகன் சுகுமாறன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மோசடியின் முக்கிய நபராக கருதப்படும் ராமநாதபுரம் வனசங்கரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வீரபாகு, பாஸ்கரன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News