செய்திகள்
கைது

மதுராந்தகம் அருகே கஞ்சா வியாபாரி கொன்று புதைப்பு 4 பேர் கைது

Published On 2020-08-21 16:14 IST   |   Update On 2020-08-21 17:26:00 IST
மதுராந்தகம் அருகே கஞ்சா வியாபாரி கொன்று புதைக்கப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்:

சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக் என்ற டோரா(வயது 24). கஞ்சா வியாபாரியான இவர் மீது சென்னையில் பல வழக்குகள் உள்ளன. இவர், தனது நண்பர் விக்னேஷ் என்ற விக்கி என்பவருடன் கடந்த 14-ந்தேதி மதுராந்தகத்தை அடுத்த காந்திநகர் பகுதியில் மது குடிக்க வந்ததாக தெரிகிறது.

அப்போது அவர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் தொழில் போட்டி காரணமாக பழைய மாம்பாக்கம் பகுதியில் தகராறு ஏற்பட்டது. அவர்கள் கார்த்திக்கை கத்தியால் வெட்டினர். உடனே விக்கி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அதன்பின்னர் கார்த்திக் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

கார்த்திக் மாயமானது குறித்து விக்னேஷ் மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பழைய மாம்பாக்கம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கத்தி மற்றும் செல்போன் போன்றவற்றை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கார்த்திக்கை கென்டிரசேரியை சேர்ந்த செங்குட்டுவன், அவரது நண்பர்களான சபரிநாதன் (24), நவீன் என்ற சைலக் (20), அஸ்வின் என்ற சைமன்(22) உள்ளிட்ட 6 பேர் கும்பல் வெட்டிக்கொன்று மதுராந்தகத்தை அடுத்த முருக்கம்பாக்கம் காட்டுப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது. போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கார்த்திக்கின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் சபரிநாதன், பெலித் (24), நவீன், அவரது அண்ணன் அஸ்வின் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News