செய்திகள்
நீலகிரி மாவட்ட கருவூல அலுவலகம் மூடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

மேலும் 9 பேருக்கு கொரோனா: நீலகிரி கருவூல அலுவலகம் மூடல்

Published On 2020-08-19 16:03 IST   |   Update On 2020-08-19 16:03:00 IST
நீலகிரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட கருவூல அலுவலகம் மூடப்பட்டது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,083 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 3 பேர் வெளிமாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டு திருத்திய பட்டியல் 1,080 ஆக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,089 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் 952 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 133 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இதற்கிடையே கூடலூரில் இருந்து வருகை தரும் ஒரு ஆண், ஒரு பெண் ஊழியர்கள், ஊட்டியை சேர்ந்த ஒரு ஊழியர் ஆகிய 3 பேருக்கு கொரோனா உறுதியானது.

தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட கருவூல அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் மூடப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் அலுவலகம் செயல்படாது என்றும், வருகிற 24-ந் தேதி மீண்டும் அலுவலகம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கொரோனா பாதித்த ஊழியர்களுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் 20 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Similar News