செய்திகள்
கோப்பு படம்.

செங்கல்பட்டு அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை திருட்டு

Published On 2020-08-19 10:17 GMT   |   Update On 2020-08-19 10:17 GMT
2 வீடுகளின் பூட்டை உடைத்து 24 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்கேஷ் (வயது 36). ரெயில்வே கார்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த மாதம் 31-ந்தேதி சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் தனது வீட்டை பூட்டிக்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அர்கேஷ் சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் செல்லும் ரெயிலில் பணிக்கு சென்றார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து அர்கேஷ் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சுந்தர பாபு நகரை சேர்ந்தவர் கலையரசன் (60). நேற்று முன்தினம் கலையரசன் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை ஆவடியில் உள்ள உறவினர் இல்ல காதணி விழா நிகழ்ச்சிக்கு சென்றார். இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக் கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து கலையரசன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News