செய்திகள்
ஒரகடம் வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு - 3 பேர் கைது
ஒரகடம் அருகே வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீசப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் எயில் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் பிரதாப் (வயது 19). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் பிரதாப்பை காணவில்லை என்று அவரது தாயார் சசிகலா (40) ஒரகடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக பிரதாப்பின் நண்பரான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த பிலிப் என்கிற வினோ (வயது 23), திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒலக்கடை பகுதியை சேர்ந்த நித்தியானந்தன் (23) மற்றும் பூவரசன் (20) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் மாயமான பிரதாப் மற்றும் இவர்கள் 3 பேரும் ஒரகடம் பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தது தெரிய வருகிறது. சம்பவத்தன்று அவர்கள் 3 பேரும் சேர்ந்து பிரதாப்பை கத்தியால் வெட்டிக்கொலை செய்து உடலில் கல்லைக்கட்டி சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பிரதாப்பிற்கும் நித்தியானந்தத்தின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால் கொலை செய்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சேந்தமங்கலம் பகுதிக்கு சென்று கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி அழுகிய நிலையில் கிடந்த பிரதாப்பின் உடலை கைப்பற்றினர்.
பிரதாப்பின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைதான 3 பேரையும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.