செய்திகள்
சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 242 கடைக்காரர்கள் மீது வழக்கு
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சமூக இடைவெளியை கடைபிடிக்காத 242 கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த 2 மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறந்து செயல்பட்டு வருகின்றன. கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் அல்லது வட்டங்கள் வரைய வேண்டும். கைகளை சுத்தப்படுத்த தண்ணீர், கிருமிநாசினி அல்லது சோப்பு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை கடைக்காரர்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சமூக இடைவெளியை கடைபிடிக்காத 242 கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிந்து கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.