செய்திகள்
கோப்புபடம்

ஊட்டியில் மழை குறைந்ததால் காய்கறிகள் அறுவடை பணி தீவிரம்

Published On 2020-08-13 19:50 IST   |   Update On 2020-08-13 19:50:00 IST
ஊட்டியில் மழை குறைந்ததால் காய்கறிகள் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக விளை நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறிகள் அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் கேரட், பூண்டுகள் அழுக தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதற்கிடையே கடந்த 4 நாட்களாக மழை பெய்யாமல் இதமான காலநிலை நிலவி வருகிறது. மழை குறைந்ததால் விவசாயிகள் மீண்டும் காய்கறிகள் அறுவடை பணியை தொடங்கி உள்ளனர்.

ஊட்டி அருகே நஞ்சநாடு, முத்தோரை, எல்லக்கண்டி, அணிக்கொரை, ஆடாசோலை, எப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே சாலையோரங்களில் லாரிகளை நிறுத்தி அறுவடை செய்த காய்கறிகள் மூட்டைகளில் நிரப்பி ஏற்றப்படுகிறது. கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை அறுவடை செய்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் தண்ணீரில் சுத்திகரிக்கப்பட்டு மூட்டைகளில் நிரப்பி விற்பனைக்காக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஊட்டியில் விளையும் காய்கறிகளுக்கு தனி மவுசு உள்ளதால் விவசாயிகள் காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதையடுத்து வருகிற மழைக்காலங்களில் காய்கறிகள் பாதிக்காமலிருக்க சிலர் முன் கூட்டியே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். உருளைக்கிழங்கு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விலை கிடைக்கிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முட்டைகோஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை போகிறது. கேரட், பீட்ரூட் ஆகிய காய்கறிகளுக்கு கணிசமான விலை கிடைக்கிறது. மேலும் மொத்த வியாபாரிகளும் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் பெய்த கனமழையின் போது பலத்த காற்று வீசியது. இதனால் பல இடங்களில் பயிரிடப்பட்டிருந்த பூண்டு செடிகள் சாய்ந்தன. அதனால் பூண்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிலர் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக ஊட்டி அருகே எல்லக்கண்டி பகுதியில் விவசாயிகள் பலத்த காற்றால் பூண்டு செடிகள் சாயாமல் இருக்க செடியை கயிறு மூலம் கட்டி வைத்து உள்ளனர். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பூண்டுகள் அதேபோல் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் காற்று வீசும் போது சாயாமல் இருப்பதால் பூண்டு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Similar News