செய்திகள்
கோப்புபடம்

சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2020-08-08 08:38 GMT   |   Update On 2020-08-08 08:38 GMT
சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அச்சரப்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சென்னயனேரி கிராமத்தில் 3 ஏக்கர் சுடுகாட்டு நிலம் உள்ளது. இதனை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுடுகாட்டு நிலத்தை மீட்டு 3 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டி தரவும், ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கிராம மக்கள், வருவாய் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சென்னயனேரி கிராம மக்கள், ஒரத்தியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் சஞ்சீவ குமாரி மற்றும் ஒரத்தி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News