செய்திகள்
கொரோனாவில் இருந்து விடுபட சிறப்பு தொழுகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் காரணமாக அவரவர் வீடுகளிலும், வீடுகளுக்கு அருகில் உள்ள இடங்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி கொரோனாவில் இருந்து விடுபட பிரார்த்தனை செய்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் காரணமாக அவரவர் வீடுகளிலும், வீடுகளுக்கு அருகில் உள்ள இடங்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி கொரோனாவில் இருந்து விடுபட பிரார்த்தனை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகத்திருநாள் என்னும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக கூட்டு தொழுகை நடைபெறவில்லை. மாறாக இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தங்கள் வீடுகளிலும், வீடுகளுக்கு அருகில் உள்ள பொது இடங்களில் 10 நபர்களுக்குள் கூடி சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
தொழுகையின் முடிவில் உலக அமைதிக்காகவும், கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் அனைவரும் விடுபட்டு வழக்கமான பணிகளை
அச்சமின்றி மேற்கொள்ளவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் புத்தாடை அணிந்து ஈத் முபாராக் என்று தங்களின் தியாகத்திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
பொது இடங்களில் ஆடு, ஒட்டகம் போன்றவற்றை அறுக்க தடைவிதிக்கப்பட்டதால் அரசு அனுமதி பெற்ற இறைச்சிக்கூடங்களில் தங்களின் குர்பானி ஆடுகளை அறுத்து இஸ்லாமியர்கள் இறைவனின் கட்டளைப்படி ஏழை எளியவர்களுக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு ஒவ்வொரு பங்காக குர்பானி கொடுத்ததோடு, ஒரு பங்கினை தாங்களும் சமைத்து சாப்பிட்டு தியாகத்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.