செய்திகள்
முதன்மை கல்வி அலுவலர் பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

Published On 2020-07-25 12:48 IST   |   Update On 2020-07-25 12:48:00 IST
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.
கடலூர்:

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 13,320 மாணவர்களும், 15,710 மாணவிகளும் என மொத்தம் 29,030 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மார்ச் 24-ந்தேதி நடைபெற்ற இறுதி நாள் தேர்வை ஊரடங்கு உத்தரவால் பல மாணவர்கள் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 10,950 மாணவர்களும், 14,111 மாணவிகளும் என மொத்தம் 25,061 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அனைவரும் கல்லூரி படிப்பிற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏதுவாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. ஆனால் தற்போது கொரோனா வைரசின் பரவல் அதிகமாக இருப்பதால் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்காக பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு நேற்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்காக மாணவ- மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு முக கவசம் அணிந்தபடி நேரில் சென்றனர். அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வைத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்கினர். சில மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுச்சென்றனர்.

Similar News