செய்திகள்
திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநத்தம்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநத்தம் பஸ்நிலையத்தில் கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு திட்டக்குடி வட்ட பொருளாளர் முருகன் தலைமை தாங்கினார். 2017-18 ம் ஆண்டு அரைத்த கரும்புக்கான பணம் ரூ.42 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் விவசாயிகளை பாதுகாத்திட குடும்பத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும், 2020-21-ம் ஆண்டிற்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரத்து 500 அறிவிக்ககோரியும், ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.400 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர் மகாலிங்கம் மற்றும் இளவரசன், தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு விவசாய சங்க துணை தலைவர் வரதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் மகாலிங்கம், வட்ட துணை செயலாளர் அன்பழகன், கிளை செயலாளர் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.