செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரியில் திருமண உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு

Published On 2020-07-21 12:05 IST   |   Update On 2020-07-21 12:18:00 IST
ஆதிதிராவிடர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இந்த ஆண்டு சிறப்பு கூறு திட்ட நிதியாக ரூ.348 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மக்களின் சமூக வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு டாக்டர் அம்பேத்கர் சமூக நீதிப் பாதுகாப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு வீடு கட்ட தற்போது மத்திய அரசின் மானியம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து சேர்த்து ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. இது நடப்பாண்டில் மேலும் ஒரு லட்சம் உயர்த்தப்பட்டு ரூ.5 லட்சமாக வழங்கப்படும்.

தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச டேப்லெட் பள்ளிக்கல்வித்துறையில் புதிய திட்டத்தையொட்டி வழங்கப்படும். ஆதிதிராவிட மகளிருக்கு கால்நடை வளர்ப்பு, விவசாய தொழில், மீன் வளர்ப்பு பிரிவு மற்றும் இதர தொழில்களில் வாங்கும் கடனுக்கு 3 சதவீத வட்டி அரசின் மானியமாக வழங்கப்படும். தற்போது ஆதிதிராவிடர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது உயர்த்தப்பட்டு ரூ.ஒரு லட்சமாக வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்டங்களுக்கு மட்டும் வருடத்துக்கு சுமார் ரூ.320 கோடி செலவிடப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைகிறார்கள். இந்த நிதியாண்டில் மேலும் 10,000 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை வழங்கப்படும்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினால் ஊக்குவிக்கப்படும் சுய உதவி குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற ஏழை மக்களின் இடர் களைவதற்காக 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் தலா ரூ.50ஆயிரம் சிறு தொழில் தொடங்குவதற்காக வட்டி மானியத்துடன் கடன் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Similar News