செய்திகள்
சத்தியமங்கலம் அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை - கலெக்டரிடம் பா.ம.க.வினர் புகார் மனு
சத்தியமங்கலம் அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பா.ம.க.வினர் புகார் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு:
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால் தலைமையில் மாநில நிர்வாகிகள் எஸ்.எல்.பரமசிவம், எம்.பி.வெங்கடாசலம், ஷேக்முகைதீன் மற்றும் கட்சியினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
சத்தியமங்கலம் தாலுகா ஆலாத்துகோம்பை எம்.ஜி.ஆர்.நகரில் பா.ம.க.வை சேர்ந்தவர்கள் கரும்பு வெட்டி கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீட்டுமனை பட்டாக்களை வைத்து கடனை பெற்றுக்கொண்டார்கள். அந்த நபர் 30 சதவீதம் வரை கந்து வட்டி வசூல் செய்து உள்ளார். பல லட்சம் ரூபாய் பணத்தை மக்களும் கட்டி உள்ளனர். ஆனால் வீட்டுமனை பட்டாவை திருப்பி கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து மக்களுடைய வீட்டுமனை பட்டாக்களை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர். இதேபோல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிலர் தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனுக்களை கொடுத்தனர்.