செய்திகள்
கோப்புபடம்

வெண்டிபாளையம் பகுதியில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்

Published On 2020-07-11 17:26 IST   |   Update On 2020-07-11 17:26:00 IST
ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரோடுகள் தோண்டப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ரோடுகள் சீரமைக்கப்படாமல் குண்டும் -குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் குழாய்களும் ஆங்காங்கே உடைக்கப்பட்டுள்ளதால் குடியிருப்புகளுக்கு குடிநீர் செல்லாத நிலையும் இருந்து வருகின்றது. இதை சரி செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் பழைய ரெயில்வே கேட் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள், தடையின்றி குடிநீர் வினியோகிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பழுதடைந்துள்ள சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News