செய்திகள்
ராணி - தங்கசாமி

சொத்தை எழுதித்தர மறுத்ததால் மாமனார் கொலை- மருமகள் கைது

Published On 2020-07-08 09:26 GMT   |   Update On 2020-07-08 09:26 GMT
செந்துறை அருகே, சொத்தை தனது பெயரில் எழுதித்தர மறுத்ததால் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள காவேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 65). விவசாயியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராமலிங்கம் கடந்த 2010-ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து தங்கசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரை ராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பாகம் பிரித்து கொடுத்துவிட்டார். இந்நிலையில் தனக்கு வழங்கிய நிலத்தினை தனது பெயரில் மாற்றம் செய்து தரக்கோரி மாமனார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தங்கசாமி கொட்டகையில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த மருமகள் ராணி தனது பெயரில் சொத்தை மாற்றி எழுதித்தருமாறு தங்கசாமியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த ராணி அருகிலிருந்த கட்டையால் தங்கசாமியை தாக்கியுள்ளார். அதன் பின்னர் உறவினர்கள் சண்டையை விலக்கிவிட்டு உள்ளனர். தங்கசாமி குடிபோதையில் இருந்ததால் அவரை காலையில் பொய்யாதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து வந்து தங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கசாமியின் இளைய மகன் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News