செய்திகள்
கிண்டியில் 750 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனை- முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை கிண்டியில் டி.வி., நூலகம், ‘வைபை’ வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மாநிலம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை கிண்டியில் கிங் ஆய்வகத்துக்கு அருகில் அமைந்துள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
70 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 300 படுக்கை வசதியில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே அதிநவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இந்த சிறப்பு மருத்துவமனையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதிக மூச்சுத்திணறலால் வருகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டிவி, நூலகம் ஆகிய வசதிகளும் உள்ளன ‘வைபை’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், நோயாளிகள் வீட்டில் இருப்பவர்களிடம் காணொலி காட்சி மூலம் பேச முடியும்.
நோயாளிகளுக்கு தேவையான சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து பரிசோதனை வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்து உள்ளது.