செய்திகள்
புதுவை பல்கலைக்கழகம்

புதுவை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்டு 17-ந்தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

Published On 2020-07-04 12:27 IST   |   Update On 2020-07-04 12:27:00 IST
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது அடுத்த கல்வி ஆண்டுக்கான காலமும் கடந்து விட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் எழுந்தது. இத்தகைய சூழலில் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் சித்ரா வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘புதுவை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி முதல் நடைபெறும். ஆகஸ்டு 17-ந் தேதி பல்கலைக்கழக வளாகம் திறக்கப்பட்டு வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News