செய்திகள்
கடலூர் கலெக்டராக பொறுப்பேற்ற சந்திரசேகர் சாகமூரி

கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக சந்திரசேகர் சாகமூரி பொறுப்பேற்பு

Published On 2020-07-02 14:12 IST   |   Update On 2020-07-02 14:12:00 IST
கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக சந்திரசேகர் சாகமூரி பொறுப்பேற்றார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த அன்புசெல்வன் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக நில சீர்த்திருத்த துறை இயக்குனராக பணியாற்றி வந்த சந்திரசேகர் சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்தார்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்ட சந்திரசேகர் சாகமூரி நேற்று தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அதையடுத்து புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, தாசில்தார்கள் செல்வக்குமார், கீதா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

சந்திரசேகர் சாகமூரி ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். அவருக்கு தெலுங்கு, தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தமிழக பணிக்கு நியமிக்கப்பட்டார். 2011-12-ல் கோபிச்செட்டிப்பாளையத்தில் சப்-கலெக்டராகவும், அதன்பிறகு அரியலூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார்.

கடலூர் தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது 1801-ம் ஆண்டு ஹாரி டெய்லர் என்பவர் முதல் கலெக்டராக இருந்தார். அதன்படி பார்த்தால் கடலூர் மாவட்டத்தின் 131-வது கலெக்டராக சந்திரசேகர் சாகமூரி பொறுப்பேற்றுள்ளார். 30.9.1993-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் தென்னாற்காடு வள்ளலார் மாவட்டமாக உதயமானது. இதன்படி பார்த்தால் கடலூர் மாவட்ட 21-வது கலெக்டராக சந்திரசேகர் சாகமூரி பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News