செய்திகள்
சிறுத்தை

தாளவாடி அருகே 6 மாதமாக கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது

Published On 2020-07-01 14:42 GMT   |   Update On 2020-07-01 14:42 GMT
தாளவாடி அருகே 6 மாதமாக கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது தாளவாடி வனச்சரகம். இங்கு ஏராளமான மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை பீம்ராஜ்நகர் பகுதியில் உள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டது.

அதன்பின்னர் அங்கிருந்து தொட்டகாஜனூர், சூசைபுரம் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு கட்டப்பட்டிருக்கும் 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும் கடித்து குதறி கொன்று வந்தது. காவலுக்காக விடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட நாய்களையும் வேட்டையாடியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள், கிராமமக்கள் பீதியடைந்தனர். இதைத்தொடர்ந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று வனத்துறையினர் சிறுத்தை நடமாடி வந்த பல்வேறு தோட்டங்களிலும், கல்குவாரியிலும் கூண்டு வைத்தனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. அவ்வப்போது தோட்டங்களில் புகுந்து தனது வேட்டையை சிறுத்தை தொடர்ந்து வந்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் சிறுத்தையை பிடிக்க வேறு ஒரு தோட்டத்தில் கூண்டு வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டகாஜனூரில் உள்ள ரங்கசாமி என்பவரது தோட்டத்தின் அருகே கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு பகுதியில் ஆடு, நாய் ஆகியவற்றை கட்டி வைத்து சிறுத்தை சிக்குகிறதா? என தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வனத்துறையினர் தொட்டகாஜனூர் சென்று, கூண்டை பார்த்தனர். அப்போது கூண்டில் சிறுத்தை சிக்கியிருந்தது தெரியவந்தது. அப்போது அது உறுமியபடி காணப்பட்டது.

பிடிபட்டது சுமார் 6 வயதுடைய ஆண் சிறுத்தை என்று கால்நடை டாக்டர் அசோகன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கூண்டோடு அந்த சிறுத்தையை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றினார்கள். பின்னர் அங்கிருந்து கேர்மாளம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று சிறுத்தையை கூண்டில் இருந்து விடுவித்தார்கள். கூண்டின் கதவுகள் திறக்கப்பட்டதும் சிறுத்தை வெளியே பாய்ந்து அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.

கடந்த 6 மாதமாக அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் கிராமமக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்தார்கள்.
Tags:    

Similar News