செய்திகள்
அபிஷேக்

கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-06-24 14:21 GMT   |   Update On 2020-06-24 14:21 GMT
கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகன் அபிஷேக்(வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி பவித்ரா(25). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட பவித்ரா, கீழ் கோத்தகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று முன்தினம் காலையில் அங்கிருந்து அவரை சமாதானப்படுத்தி தனது வீட்டுக்கு அபிஷேக் அழைத்து வந்தார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அபிஷேக், மதியம் 2 மணியளவில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் இரவு 9 மணியளவில் அரக்கம்பை கிராமத்துக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கல்பாறை என்ற இடத்தில் உள்ள ஒரு கற்பூர மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அபிஷேக் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அபிஷேக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News