செய்திகள்
சின்கோனா மூலிகை தாவர வளர்ப்பகத்தில் தேக்கம் அடைந்த தைலங்கள்

சின்கோனா மூலிகை தாவர வளர்ப்பகத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான தைலங்கள் தேக்கம்

Published On 2020-06-24 19:45 IST   |   Update On 2020-06-24 19:46:00 IST
ஊட்டி அருகே சின்கோனா மூலிகை தாவர வளர்ப்பகத்தில் ரூ.6 லட்சம் தைலங்கள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சின்கோனா கிராமத்தில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம், வனத்துறையின் கூட்டு வன மேலாண்மை சார்பில் செயல்பட்டு வருகிறது. தைலம், ரோஸ்மேரி, சிட்ரநெல்லோ, ஜெரேனியம், பார்சிலி, லெமன்கிராஸ் உள்பட 13 வகையான மூலிகை தாவரங்கள் 15 ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் தைலங்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா, டாப்சிலிப், ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும் மூலிகை தைலங்கள் மருத்துவமனைகள் மற்றும் நறுமண வைத்திய சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வராததால் விற்பனை ஆகவில்லை. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தைலங்களை வாங்க முன்வரவில்லை. இதனால் தைல உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதை நம்பி சின்கோனா கிராமத்தில் 105 குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். ஊரடங்கால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தைல உற்பத்தி 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாததால் தைலங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து மூலிகை தாவரங்கள் வளர்ப்பக மேலாளர் உதயகுமார் கூறியதாவது:-

ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் தைலங்கள் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மூலிகையின் நன்மைகளை மக்கள் உணர்ந்து பயன்படுத்தியதால் அதன் தேவை அதிகரித்து இருந்தது.

இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதால் தைலங்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இருப்பினும் குறைந்த தொழிலாளர்களை கொண்டு தைல உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒருமுறை நடவு செய்யப்படும் மூலிகை தாவரம் 5 ஆண்டுகள் வரை வளரும். இதனால் அதை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் நிறுவனங்களில் இருப்பு அதிகமாக உள்ளதால், மேலும் ஆர்டர் செய்யவில்லை. குறைந்தளவு உற்பத்தி செய்யப்பட்டாலும் விற்பனை ஆகாததால் ரூ.6 லட்சம் மதிப்பிலான தைலங்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் மூலிகை நாற்றுகள் வளர்க்கப்பட்டு தேவையான விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். நடப்பாண்டில் ஊரடங்கால் 2 மாதங்கள் தள்ளிப் போனது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூலிகை நாற்றுகள் நடவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News