செய்திகள்
தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மையம்

வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 550 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Published On 2020-06-22 21:01 IST   |   Update On 2020-06-22 21:01:00 IST
வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடு வந்த 550 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் வளையக்கார வீதி, அகத்தியர் வீதி, கண்ணகி வீதி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு இ-பாஸ் பெற்று வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நேரடியாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு இவர்களுக்கு ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றால் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தொற்று உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறும்போது, ‘சென்னையில் இருந்து வந்த சிலர் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சம்பத் நகர் பகுதியில் 2½ வயது குழந்தைக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த குழந்தையின் வீடு உள்பட 7 வீடுகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் பால், மளிகை, பழக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 550 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும்’ என்றார்.

Similar News