செய்திகள்
முககவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்
அம்மாபேட்டையில் முககவசம் அணியாத 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் எம்.சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி ஆகியோரது தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அம்மாபேட்டை போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வாகனங்களில் மற்றும் நடந்து வந்த சுமார் 50 பேருக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் பெருந்துறை நகரில் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வடக்கு பகுதியில் இயங்கி வரும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் விற்பனை கடைகளில் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கி செல்வதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட குன்னத்தூர் ரோடு பகுதிக்கு நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர். மேலும் இனிமேல் முக கவசம் அணியாமல் கடைகளுக்கு வரும் நபர்களிடம் வியாபாரம் செய்யக்கூடாது என்றும், அதை மீறி வியாபாரம் செய்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என்றும் கடை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.